ஹிரிவட்டுன பகுதியில் மேலும் 3 யானைகளின் சடலங்கள் கண்டெடுப்பு

by Staff Writer 28-09-2019 | 3:45 PM
Colombo (News 1st) ஹபரணை - திகம்பத்தஹ, ஹிரிவட்டுன பகுதியில் இருந்து இன்று அதிகாலை மேலும் 3 யானைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உடலில் விஷம் பரவியதால் யானைகள் உயிரிழந்துள்ளதாக சிகிரியா வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி சந்திர பண்டாரநாயக்க தெரிவித்தார். குறித்த பகுதியில் இருந்து நேற்று மாலை 4 யானைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. உடலில் விஷம் பரவியதால் அந்த யானைகளும் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. குறித்த வனப்பகுதியில் மேலும் யானைகள் உயிரிழந்துள்ளதா என சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி சந்திர பண்டாரநாயக்க தெரிவித்தார். இதற்கிணங்க, இன்று நாள் முழுவதும் வனப்பகுதியில் இராணுவத்தினர் ஒன்றிணைந்த விசேட சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். உயிரிழந்த யானைகளின் உடல்கள் அனைத்தும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனை இன்று மாலை முன்னெடுக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பிலான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிகிரியா வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி சந்திர பண்டாரநாயக்க தெரிவித்தார்.