by Bella Dalima 28-09-2019 | 5:12 PM
ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவிக்கான தேர்தலுக்காக அமைக்கப்பட்டிருந்த வாக்களிக்கும் நிலையம் ஒன்றில் குண்டுவெடிப்பு இடம்பெற்றதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அதிபரை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை ஆரம்பமானது.
அந்நாட்டின் தற்போதைய அதிபர் அஷ்ரப் கானியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய அதிபரை தெரிவு செய்வதற்கான வாக்குப்பதிவில் பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது பல்வேறு இடங்களில் வன்முறைத் தாக்குதல்கள் நடைபெற்றதால், வாக்களிக்கும் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அதையும் மீறி பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்நிலையில், தலைநகர் காபூலில் உள்ள பகராம் மாவட்டத்தில் சம்சாத் தெருவில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று காலை குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 16 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.
இந்த தாக்குலை தலிபான் பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.