நடிகை கொலை வழக்கில் சகோதரருக்கு ஆயுள் தண்டனை

பாகிஸ்தானின் சர்ச்சை நடிகை கொலை வழக்கில் சகோதரருக்கு ஆயுள் தண்டனை

by Bella Dalima 27-09-2019 | 5:44 PM
சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வந்த பாகிஸ்தான் கவர்ச்சி நடிகை குவான்டீல் பலூச் கொலை வழக்கில் அவரது சகோதரருக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தான் மாடல் அழகியும் தொலைக்காட்சி நடிகையுமான குவான்டீல் பலூச் அடிக்கடி அதிரடியாக ஏதாவது செய்து, தலைப்புச் செய்திகளில் தனது பெயர் தலைக்காட்ட வேண்டும் என்பதில் அதிக விருப்பம் கொண்டவராக விளங்கினார். கடந்த 2016 ஆம் ஆண்டில் குவான்டீல் பலூச் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டிருந்தார். T20 உலகக்கிண்ண போட்டிகளில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தால் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக அந்த வீடியோ செய்தியில் அவர் கூறியிருந்தார். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் அப்ரிடிக்கு சிறப்பு சலுகை ஒன்றையும் அறிவித்தார். போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அவர் என்ன சொன்னாலும் அதை தான் செய்வதாக வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற T20 உலகக்கிண்ண போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றது. இந்தியாவின் அந்த அபார வெற்றி, பாகிஸ்தான் ரசிகர்களுக்கு எத்தகைய வெறியை ஏற்படுத்தியுள்ளது என்பதை விளக்கும் விதமாக சர்ச்சை நடிகை குவான்டீல் பலூச் ஒரு வீடியோவை வெளியிட்டார். பாகிஸ்தான் வெற்றிபெற முடியாமற்போனது பற்றியும், தனக்கு நிர்வாணமாக நடனம் ஆடும் வாய்ப்பு கிடைக்காமற்போனது குறித்தும் தனது கோபத்தைக் குறைக்கும் வகையில் ஷாஹித் அப்ரிடியை அந்த வீடியோவில் திட்டித் தீர்த்திருந்தார். இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு பேர்போன குவான்டீல் பலூச்(26) பஞ்சாப் மாகாணத்தின் முல்தான் நகரில் உள்ள வீட்டில் 15-7-2016 அன்று சடலமாக மீட்கப்பட்டார். குடும்ப கௌரவத்தை சீர்குலைத்ததால் கழுத்தை நெரித்து அவரைக் கொன்றுவிட்டதாக குவான்டீல் பலூச்சின் சகோதரர் முஹம்மது வாசிம் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்தார். முல்தான் கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த கொலை வழக்கில் 35 சாட்சிகளிடம் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. குவான்டீல் பலூச்சின் சகோதரர் முஹம்மது வாசிமிற்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிபதி இம்ரான் ஷபி, இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த குவான்டீல் பலூச்சின் மற்றொரு சகோதரர் மற்றும் சிலரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.