கிரேட்டாவின் பேரணியில் கலந்துகொள்ளும் ட்ரூடோ

கிரேட்டா தன்பெர்க்கின் பேரணியில் கலந்துகொள்ளப் போவதாக கனேடிய பிரதமர் அறிவிப்பு

by Bella Dalima 27-09-2019 | 4:55 PM
பருவநிலை மாற்றம் தொடர்பில் கிரேட்டா தன்பெர்க்கினால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளப் போவதாக கனேடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இடம்பெறவுள்ள பேரணியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கனேடியர்கள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். கனடாவில் அடுத்த மாதம் 21 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதுடன், ஜஸ்ட்டின் ட்ரூடோ மீண்டும் களமிறங்குகின்றார். அண்மையில் ட்ரூடோ மீது சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய அவரின் அறிவிப்பு தேர்தலில் செல்வாக்கு செலுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் பருவநிலை மாற்றம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பேரணிகளை முன்னெடுக்குமாறு ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயதான கிரேட்டா தன்பெர்க் அழைப்பு விடுத்துள்ளார். கிரேட்டா தன்பெர்க்கின் அழைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உலகளாவிய ரீதியில் பல நாடுகள் பாடசாலைகளை மூடியுள்ளதுடன், சில நிறுவனங்கள் தமது ஊழியர்களை பேரணியில் கலந்துகொள்ள அனுமதித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.