எல்பிட்டிய பிரதேசசபை: தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தபால் மூல வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெறுகிறது

by Staff Writer 27-09-2019 | 4:23 PM
Colombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபைக்கான தபால் மூல வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெறுவதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்தார். 269 வாக்களிப்பு நிலையங்களில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறுகின்றது. இன்று காலை 9 மணி முதல் அரச ஊழியர்கள் வாக்களித்து வருவதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் குறிப்பிட்டார். எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில், தபால் மூலம் வாக்களிப்பதற்கு 1192 பேர் தகுதி பெற்றுள்ளனர். தபால் மூல வாக்களிப்பு நிலையங்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் சோமரத்ன விதானபத்திரன கூறினார். இன்று தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி வாக்களிப்பதற்கு மேலதிக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிரதேச சபை தேர்தலுக்கு 53,384 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.