by Staff Writer 27-09-2019 | 3:46 PM
Colombo (News 1st) தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெறாமையால், இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் , அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜூலை மாதம் 22 ஆம் திகதியுடன் நிறைவு பெற்றது. எனினும், ஜனாதிபதியால் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டது.
ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகளில் 22 முறைப்பாடுகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.