மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

by Staff Writer 26-09-2019 | 9:42 AM
Colombo (News 1st) களுத்துறை, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (26) மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இன்றைய தினமும் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அவ்வாறு மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. கடற்பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களம், இடர் முகாமைத்துவ நிலையம், தேசிய கட்ட ஆய்வு நிறுவகம், தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையங்களில் பணிபுரியும் அனைத்து உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் J.J. இரத்னசிறியின் கையொப்பத்துடன் வௌியாகியுள்ள சுற்றுநிரூபத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.