64 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

by Staff Writer 26-09-2019 | 4:48 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக இவர்கள் 64 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர். நுவரெலியாவில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாத் தலைமைகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பெண்களும் 60 ஆண்களும் அடங்குகின்றனர். தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இன்று மட்டக்களப்பு நீதவான் ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, அவர்களை அடுத்த மாதம் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். சந்தேகநபர்கள் நீதிமன்றத்திற்கு விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பில் அழைத்துவரப்பட்டிருந்தனர்.