by Staff Writer 26-09-2019 | 6:39 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்க கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் கூடியது.
இதன்போது, தமது ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்க கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்தது.
இன்று முதல் தேர்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர், அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை கட்சியின் செயற்குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறினார்.
அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் வெற்றிக்கான ஜனாதிபதி தேர்தல் பயணத்தை கட்சி ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் 30 ஆம் திகதி ஐக்கிய தேசிய முன்னணியினரை சந்திக்கவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு எதிர்வரும் 3 ஆம் திகதி சுகததாச அரங்கில் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், எதிர்வரும் 10 ஆம் திகதி கொழும்பு - காலி முகத்திடலில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாபெரும் பேரணி இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.