கமல் வாங்கிய பணத்தை திருப்பித் தரவில்லை என புகார்

கமல் வாங்கிய பணத்தை திருப்பித் தரவில்லை: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்

by Bella Dalima 26-09-2019 | 4:38 PM
உத்தம வில்லன் பட வெளியீட்டின் போது தன்னிடமிருந்து வாங்கிய 10 கோடி ரூபாவை நடிகர் கமல் ஹாசன் திருப்பித்தரவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவான படம் - உத்தம வில்லன். இந்நிலையில், கமல் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது:
2015 ஆம் ஆண்டு உத்தம வில்லன் பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து என்னை கமல் அணுகினார். எனது தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாகக் கூறி முற்பணமாக ரூ. 10 கோடியைக் கேட்டுப்பெற்றார். ஆனால், நான்கு ஆண்டுகளாகியும் நடிக்க அவர் முன்வரவில்லை. மேலும், ரூ. 10 கோடியையும் திருப்பித் தரவில்லை. இந்தப் பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு எனக்கு சேரவேண்டிய ரூ. 10 கோடியைப் பெற்றுத் தரவேண்டும்
இந்தப் புகாரின் அடிப்படையில் கமல் ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த புகாருக்கு பதிலளித்துள்ள கமல் தரப்பு, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஞானவேல் ராஜாவிடம் எந்தவித உத்தரவாதமும் வழங்கவில்லை என்று கூறியுள்ளது.