இன்றிரவு சேவையில் ஈடுபடவிருந்த அனைத்து தபால் ரயில்களும் இரத்து

by Staff Writer 26-09-2019 | 6:20 PM
Colombo (News 1st) இன்றிரவு சேவையில் ஈடுபடவிருந்த அனைத்து தபால் ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், 6 அலுவலக ரயில்கள் மாத்திரம் இன்று காலை சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி தென்னகோன் குறிப்பிட்டார். சில கோரிக்கைகளை முன்வைத்து, ரயில்வே ஊழியர்கள் நேற்று (25) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்தனர். சம்பள முரண்பாட்டிற்கான தீர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் இதில் இணைந்துள்ளனர். சிலாபம், காலி, கண்டி மற்றும் குருநாகல் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து 6 அலுவலக ரயில்கள் மாத்திரம் இன்று காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்ததாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ கூறினார். ஏனைய அனைத்து அலுவலக ரயில்களையும் இரத்து செய்ய வேண்டி ஏற்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் குறிப்பிட்டார். கொழும்பு - கோட்டை பிரதான ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை எந்தவொரு ரயிலும் போக்குவரத்தில் ஈடுபடவில்லை.