பிரித்தானிய பிரதமரை பதவி விலகுமாறு வலியுறுத்தல்

பிரித்தானிய பிரதமரை பதவி விலகுமாறு வலியுறுத்தல்

by Staff Writer 25-09-2019 | 1:58 PM
Colombo (News 1st) பிரித்தானிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, எம்பிக்கள் மீண்டும் பாராளுமன்றத்திற்குத் திரும்பியுள்ளனர். இந்தநிலையில், நியூயோர்க்கிலிருந்து உடனடியாக நாடு திரும்பும் பிரதமர் போரிஸ் ஜோன்ஸனைப் பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. நேற்றைய தினம் பிரித்தானிய உயர்நீதிமன்றம் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புடன் தாம் உடன்படவில்லை என்ற போதிலும், குறித்த தீர்ப்பிற்கு தாம் மரியாதை வழங்குவதாக பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில், பிரதமரின் கேள்விகள் எவையும் இடம்பெறாது என்றபோதிலும் அவசர கேள்விகள் மற்றும் அமைச்சர்களின் அறிக்கைகள் கேட்கப்படும் என பொதுச்சபையின் சபாநாயகர் ஜோன் பேர்கௌவ் (John Bercow) தெரிவித்துள்ளார். நேற்றைய தீர்ப்பினைத் தொடர்ந்து தொழிற்கட்சியின் தலைவர் ​ஜெரமி கொபின் தமது கட்சியின் மாநாட்டு உரையை முற்கூட்டியே நடத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகளைத் தடுத்துநிறுத்த முயற்சித்ததன் ஊடாக பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் சட்டவிரோதமாக செயற்பட்டுள்ளதாகக் குற்றஞ்சுமத்தியுள்ள அவர், தேர்தலின் ஊடாகத் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.