தீர்வு கிடைக்காமைக்கான காரணத்தை சிந்திக்க வேண்டும்

பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு காரணம் என்ன என்பதை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்: ஆனந்தசங்கரி

by Staff Writer 25-09-2019 | 7:30 PM
Colombo (News 1st) யுத்தம் முடிவடைந்து 10 வருடங்களாகியும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பதை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. தேசிய ஜனநாயக மரபுகள் மீறப்பட்டு இரா. சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டதாக கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இதனால் அரசாங்கத்தைத் தட்டிக்கேட்கும் உரிமையும் தகுதியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடையாது எனவும் ஆனந்தசங்கரி கூறியுள்ளார். மக்களுக்கு ஏதேனும் சலுகைகள் கிடைக்காத போதும், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிகளவு சலுகைகள் கிடைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்துடன் பேரம் பேசும்போது, பேரம் பேசுபவர்கள் ஜனநாயகப் பண்புகளை மதிக்கக்கூடியவர்களாகவும் சலுகைகளுக்கு சோரம் போகாதவர்களாகவும் இருந்திருக்க வேண்டும் எனவும் ஆனந்தசங்கரி கூறியுள்ளார். நன்றிக்கடனாக ஒவ்வொரு வரவு செலவுத்திட்டத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஒன்றுபட்ட இலங்கைக்குள் இந்திய முறையிலான அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்கு பெற்றுத்தர போராடும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கரங்களைப் பலப்படுத்துமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.