இம்ரானின் தந்தை, சகோதரரின் விளக்கமறியல் நீடிப்பு

கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட அறுவரின் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 25-09-2019 | 5:36 PM
Colombo (News 1st) திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளியான கஞ்சிப்பானை இம்ரானுக்கு பூசா சிறையில் கையடக்கத் தொலைபேசிகளை வழங்க முற்பட்ட 6 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. காலி பிரதம நீதவான் ஹர்ஷன கெக்குணவெல முன்னிலையில் சந்தேகநபர்கள் 6 பேரும் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களின் விளக்கமறியல் உத்தரவு அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கைதிகள் நலன்புரி தினத்தை முன்னிட்டு கைதிகளை சந்திப்பதற்கு கடந்த 12 ஆம் திகதி சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த போது, கஞ்சிப்பானை இம்ரானை சந்திப்பதற்கு அவரின் தந்தை மற்றும் சகோதரர் உள்ளிட்ட 6 பேர் பூசா சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர். கஞ்சிப்பானை இம்ரானுக்கு எடுத்துச்செல்லப்பட்ட உணவுப்பொதியை சோதனைக்குட்படுத்திய போது, அதில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் அதற்கான சார்ஜர்களும் கைப்பற்றப்பட்டன. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் 6 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கஞ்சிப்பானை இம்ரானுக்கு எதிராக, கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் 17 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.