எல்பிட்டிய தேர்தலுக்கு தடை கோரும் மனு தள்ளுபடி

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை கோரும் மனு தள்ளுபடி

by Staff Writer 25-09-2019 | 5:49 PM
Colombo (News 1st) மீண்டும் வேட்புமனு கோராமல் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று வழக்குக் கட்டணங்களின்றி தள்ளுபடி செய்துள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, பீ.பத்மன் சூரசேன மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அங்கம் வகிக்கும் நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக்கா தேவமுனி டி சில்வா முன்வைத்த விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, நீதியரசர்கள் குழாம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய, கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி வர்த்தமானியை வௌியிட்டிருந்தார். குறித்த வர்த்தமானியை இடைநிறுத்தும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

ஏனைய செய்திகள்