வட்டி வீதத்தைக் குறைக்குமாறு நாணய சபை அறிவிப்பு

வட்டி வீதத்தைக் குறைக்குமாறு நாணய சபை அறிவிப்பு

by Staff Writer 24-09-2019 | 9:47 PM
Colombo (News 1st) அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் ரூபா கடன் மற்றும் முற்பணத்திற்கான வட்டி வீதத்தைக் குறைக்குமாறு நாணய சபை அறிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு அமைவாக 2019 ஒக்டோபர் 15 ஆம் திகதியளவில் அனைத்து ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்கள் மீது ஏற்புடைய வட்டி வீதங்களை குறைந்தபட்சம் 200 அடிப்படைப் புள்ளிகளால் குறைப்பதற்கு உரிமம் பெற்ற வங்கிகளுக்கு கட்டளையிடுவதற்கு நாணய சபை தீர்மானித்துள்ளது. 2019 நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் விதத்தில் கடனட்டை முற்பணங்கள் விடயத்தில் ஏற்புடைய உயர்ந்தபட்ச வட்டி வீதமானது ஆண்டிற்கு 28 சதவீதமாக இருக்கும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது. முன்கூட்டி ஒழுங்கேற்பாடு செய்யப்பட்ட தற்காலிக மேலதிகப் பற்றுக்கள் விடயத்தில் ஏற்புடைய உயர்ந்தபட்ச வட்டி வீதங்கள் ஆண்டிற்கு 24 சதவீதமாக இருக்கும் என மத்திய வங்கி இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2019 ஓக்டோபர் 15ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் விதத்தில் கடன்கள் மற்றும் முற்பணங்களுக்கு சேர்க்கப்படும் தண்ட வட்டி வீதங்கள், அனுமதிக்கப்பட்ட எல்லையின் மிகைத் தொகைக்கு அல்லது நிலுவைகளுக்கு செலுத்த வேண்டிய காலப்பகுதியின் போது ஆண்டிற்கு 400 அடிப்படைப் புள்ளிகளைக் கொண்ட வரையறையினைக் கொண்டிருக்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.