மக்களுக்கான நிவாரணம் தொடர்பில் ஜனாதிபதி பணிப்புரை

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

by Staff Writer 24-09-2019 | 1:23 PM
Colombo (News 1st) பலத்த மழையுடன் கூடிய வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நிவாரண நடவடிக்கைகளுக்காக, முப்படையினரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து மக்களை வௌியேற்றும் நடவடிக்கைகளை முப்படையினரின் ஒத்துழைப்புடன் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கூறியுள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான நிதியொதுக்கீடு தொடர்பில் எவ்வித தயக்கங்களும் தேவையில்லை என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்காக நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்குமாறும் தாம் முன்னின்று அந்த நிதியை பெற்றுக் கொடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பிலும் இன்று (24) ஜனாதிபதி செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதன்போது இந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2 மாதங்களுக்குள் அதிக மழையுடனான வானிலை இடைக்கிடையே நிலவும் என இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளதுடன், முன்னாயத்த செயற்பாடுகளுள் அந்த நிலைமைகளை எதிர்கொள்வதற்காக துறைசார் அமைச்சுடன் இணைந்து திட்டமிட்டு செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.