சேவைக்காலத்திற்கு முன்னதாக ஓய்வுபெற்ற அங்கவீனமடைந்த இராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம்

by Staff Writer 24-09-2019 | 9:24 PM
Colombo (News 1st) கொழும்பு - கோட்டையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் இன்று முற்பகல் மீண்டும் ஜனாதிபதி செயலகத்திற்கு பேரணியாக சென்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஓய்வுக்காலம் ஆரம்பமானதன் பின்னர் தமக்கு வழங்கிய மாதாந்த சம்பளத்தையும் வழங்குமாறு சேவைக்காலத்திற்கு முன்னர் ஒய்வுபெற்ற இந்த இராணுவ வீரர்கள் கோருகின்றனர். லோட்டஸ் வீதியை மறித்து அவர்கள் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, இந்த இராணுவ வீரர்களின் கோரிக்கையுடன் தொடர்புடைய அமைச்சரவைப் பத்திரத்திற்கு இன்று அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. இன்றைய அமைச்சரவைக் கூட்டம் தொடர்பில் பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. அரச சேவையாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட எஸ்.ரனுக்கே தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அவர் கூறினார்.