கட்சியிலிருந்து விலகியவர்களிடம் அமைச்சர் சஜித் விடுத்துள்ள வேண்டுகோள்

by Staff Writer 24-09-2019 | 1:48 PM
Colombo (News 1st) கட்சியிலிருந்து விலகிச்சென்ற அனைவரும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக தம்முடன் இணையுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். ஊடக அறிக்கையொன்றின் மூலம் அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். கருத்து முரண்பாடுகள், கலந்துரையாடலின் மூலம் தீர்த்துக்கொள்ளக்கூடிய விடயங்கள் எனவும் அது பிளவுபடுவதற்குக் காரணமாக அமையாது எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கட்சியிலிருந்து விலகியுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளின் உறுப்பினர்கள், கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள், கட்சி மற்றும் மக்களின் வெற்றிக்காக தம்முடன் கைகோர்க்குமாறு அவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், கட்சியின் பெருமையை உறுதிப்படுத்துவதற்கு தம்முடன் இணையுமாறும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாச தனது அறிக்கையின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.