பிரேரணைகள் தொடர்பான பிரதமரின் கருத்திற்கு ஜனாதிபதி பதில்

by Staff Writer 21-09-2019 | 9:14 PM
Colombo (News 1st) அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட பிரேரணைகள் தொடர்பில் பிரதமர் தெரிவித்த கருத்திற்கு ஜனாதிபதி இன்று மாத்தளையில் பதில் வழங்கினார். ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமையவே அமைச்சரவையைக் கூட்டியதாக ரணில் விக்ரமசிங்க கூறியதாக பத்திரிகைகளில் இன்றுள்ளது, நடக்க வேண்டியது அனைத்தும் நடந்து அமைச்சர்களிடம் பழிச்சொல் கேட்ட பின்னர் ரணில் தன் மீது பழி சுமத்த பார்க்கிறார் என ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி பதவியை இரத்து செய்ய வேண்டும் என தான் கொள்கையளவில் எப்போதும் கூறியதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அதனைக் கொண்டு வருவது நகைப்புக்குரியது எனவும் கூறினார். முப்படையிலிருந்து மூவர் தனது கட்டளையின்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தான் தெரிவித்த கருத்தினால் தான் டில்ருக்ஷி டயஸ் பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்து சென்றதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக டில்ருக்ஷி டயஸை நியமிக்குமாறு இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க எனக்கு கடிதம் அனுப்பினார். தற்போதுள்ள குரல் பதவில் அவர் கூறுவது என்ன என்பது தொடர்பில் நீங்கள் கேட்டிருப்பீர்கள். அவர் கூறும் விடயங்களில் இருந்து அந்தப் பதவிக்கு பொருத்தமானவர் அவர் அல்ல என்பது உங்களுக்கு இப்போது புலப்படும். காலை, மாலை எவ்வேளையிலும் டில்ருக்ஷி அம்மையார் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் கடமையாற்றுகின்றார். மாலை 6 மணியின் பின்னர் அலரி மாளிகையின் இலஞ்ச ஊழல் ஒழிப்பு செயலகத்தில் இவ்வாறே கடமை புரிகின்றார். ஆதலாலேயே இவர் இதற்கு பொருத்தமில்லை, விட்டுச்செல்லுங்கள் என்று சொன்னேன்.
என ஜனாதிபதி கூறினார். ரணில் விக்ரமசிங்க கடந்த 4 வருடங்களாக மத்திய வங்கிக் கொள்ளை முதல் டில்ருக்ஷி விக்ரமசிங்கவின் அண்மித்த கருத்து வரையான பின்புலத்தில் எந்தளவு பிழையான விடயங்களை செய்திருக்கின்றார்கள் என்பது புலனாவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மாத்தளையில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டிலேயே அவர் இவ்விடயங்களைத் தெரிவித்தார்.