சவுதிக்கு அமெரிக்க படைகளை அனுப்ப ட்ரம்ப் ஒப்புதல்

சவுதியின் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பிற்காக அமெரிக்க படைகளை அனுப்ப ட்ரம்ப் ஒப்புதல்

by Staff Writer 21-09-2019 | 3:51 PM
Colombo (News 1st) சவுதி அரேபியாவின் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பிற்காக அமெரிக்க படைகளை அனுப்புவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட பாரிய தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் அனுப்பப்படுகின்றன. அத்துடன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இராணுவ ஆயுதங்களை விநியோகிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. மேலும், குறித்த பிராந்தியத்தில் விமானம் தாங்கி கப்பலொன்றையும் நிலைநிறுத்த அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஹூதி கிளர்ச்சிக்குழு உரிமை கோரினாலும், அமெரிக்கா ஈரான் மீது குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன், தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆளில்லா விமானங்களின் எஞ்சிய பாகங்கள் தாக்குதலின் பின்னணியில் ஈரான் உள்ளமையை உறுதிப்படுத்துவதாக சவுதி அரேபிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும், ஈரான் தம்மீதான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.