குப்பைகளை இடமாற்ற விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

வௌிநாட்டு குப்பை கொள்கலன்களை இடமாற்ற விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

by Staff Writer 20-09-2019 | 6:53 PM
Colombo (News 1st) வௌிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குப்பபைகள் அடங்கிய கொள்கலன்களை நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் கொண்டு செல்வதை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி வரை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் , நீதிபதி யசந்த கோத்தாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரால் இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய பொருளாதா ஊக்குவிப்பு வலையம் ஆகிய பகுதிகளில் காணப்படும் வௌிநாட்டு குப்பைகள் அடங்கிய கொள்கலன்களிலிருந்து மாதிரிகளைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த குப்பைகள் அடங்கிய கொள்கலன்களின் மீள் ஏற்றுமதிக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றாடல் கேந்திர மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு அடுத்த மாதம் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.