ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை பெயரிடுமாறு வலியுறுத்தி கொழும்பில் பேரணி

by Staff Writer 20-09-2019 | 8:17 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை பெயரிடுமாறு வலியுறுத்தி கொழும்பில் இன்று பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு விஹாரமாதேவி பூங்காவிற்கு அருகில் இன்று முற்பகல் இந்த பேரணி ஆரம்பமானது. நாட்டைப் பாதுகாக்கும் பேரணி என இது பெயரிடப்பட்டிருந்தது. மூன்று பௌத்த பீடங்களை சேர்ந்த தேரர்கள் முன்னணியினால் தயாரிக்கப்பட்ட ஆவணமொன்றும் இங்கு வௌியிடப்பட்டது. பின்னர், சுதந்திர சதுக்கத்திற்கு அருகிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபகர் டி.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலை வரையில் மகா சங்கத்தினர் பேரணியாக சென்றனர். சுதந்திர சதுக்க வளாகத்தில் வழிபாடுகளும் இடம்பெற்றன. இந்த பேரணி இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அலரி மாளிகைக்கு முன்னால் களகத்தடுப்பு குழுவினர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.