கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் அமைதியின்மை

by Staff Writer 20-09-2019 | 8:07 PM
Colombo (News 1st) மாலை நேர ரயில் சேவைகள் தாமதமடைந்தமை காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இன்று மாலை அமைதியின்மை ஏற்பட்டது. அலுவலக ரயில்கள் உள்ளிட்ட பல ரயில் சேவைகள் இன்று மாலை தாமதமடைந்தன. கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்திருந்த அதிகளவான பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர். ரயில்வே ஊழியர்களுக்கு பயணிகள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. ரயில் சாரதிகள் சட்டத்திற்கமைய பணிபுரியும் தொழிற்சங்க நடவடிக்கையை நேற்று (19) மாலை ஆரம்பித்தனர். இன்று மாலை சமிக்ஞை கோளாறு காரணமாக பல ரயில்கள் தாமதமடைந்தமையால் பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர். கொழும்பு கோட்டை மற்றும் மருதானைக்கு இடைப்பட்ட பகுதியில் இன்று அதிகாலை முதல் சமிக்ஞை கட்டமைபில் கோளாறு ஏற்பட்டது.