கடத்தப்பட்ட வர்த்தகர் கொட்டாவயில் கண்டுபிடிப்பு

ஊருபொக்கயில் கடத்தப்பட்ட வர்த்தகர் கொட்டாவயில் கண்டுபிடிப்பு: மூவர் கைது

by Staff Writer 20-09-2019 | 7:32 PM
Colombo (News 1st) மாத்தறை - ஊருபொக்க பகுதியில் கடத்தப்பட்ட வர்த்தகர் கொட்டாவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடத்தல் சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபர்கள் பயணித்த இலக்கத்தகடு அற்ற வேன் தொடர்பில் கிடைத்த CCTV காணொளியை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளூடாக வேனின் உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டார். பிலியந்தலை பகுதியை சேர்ந்த குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளூடாக வர்த்தகரைக் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வேன் குத்தகை அடிப்படையில் கொட்டாவ பகுதியிலுள்ள ஒருவரால் பெற்றுக்கொள்ளப்பட்டமை கண்டறியப்பட்டது. அதற்கமைய, கொட்டாவ பகுதியில் வேனை குத்தகைக்கு பெற்றுச்சென்ற நபர் மீண்டும் அதனை உரிமையாளரிடம் கையளிக்க சென்ற போது கைது செய்யப்பட்டார். அவருடன் இருந்த மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடுவல மற்றும் அத்துருகிரிய பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை மொரவக்க நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தி தடுப்புக்காவல் உத்தரவை பெறவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடத்தப்பட்ட வர்த்தகர் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாத்தறை - ஊருபொக்க, பெரலபனாதர பகுதியை சேர்ந்த பெருந்தோட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள குறித்த வர்த்தகர் நேற்று காலை 6.30 அளவில் இலக்கத்தகடற்ற வேனில் கடத்தப்பட்டார்.