அவன்ற் கார்ட் வழக்கு  மீண்டும் விசாரணை

அவன்ற் கார்ட் வழக்கு: மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவிற்கான பிரதி கிடைக்காமையால் மீண்டும் விசாரணை

by Staff Writer 20-09-2019 | 4:01 PM
Colombo (News 1st) அவன்ற் கார்ட் வழக்கிலிருந்து கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கான பிரதி கிடைக்காமையினால் இந்த வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில், மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்க முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை பிரதம நீதவான், நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பி வைக்க வேண்டுமென இதன்போது மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ தாக்கல் செய்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அச்சல வெங்கப்புலி, அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் கடந்த 12 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுக்துக்கொள்ளப்பட்ட போது , அவர்களை விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவன்ற் கார்ட் சம்பவம் தொடர்பில் தமக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை ஆட்சேபித்து கோட்டாபய ராஜபக்ஸ இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். Avant Garde Maritime Services நிறுவனத்தினூடாக மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை முன்னெடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கியதனூடாக அரசிற்கு 1140 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 08 பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.