by Staff Writer 20-09-2019 | 3:27 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களை விடுதலை செய்வதாகக் கூறி 17,15,000 ரூபா பணத்தை உறவினர்களிடம் பெற்றுக்கொண்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டிகாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள சந்தேகநபர் ஒருவரையும் பயங்கரவாத விசாரணைப்பிரிவின் பொறுப்பிலுள்ள இரண்டு சந்தேகநபர்களையும் விடுதலை செய்து தருவதாகக் கூறி பணம் பெறப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு பணத்தை வழங்குவதினூடாக கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவித்துக்கொள்ள முடியுமென அவர்களின் உறவினர்களிடம் சந்தேகநபர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்கமைய, சந்தேகநபர் 17,15,000 ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இந்த முறைப்பாட்டிற்கமைய, பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.