ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் கூட்டம்

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

by Staff Writer 19-09-2019 | 7:34 AM
Colombo (News 1st) ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களின் கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று (19) பிற்பகல் நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசத்திற்கு பிரதமர் நேற்று ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று மாலை அலரிமாளிகையில் நடைபெறவுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இன மக்கள் மற்றும் இளையோரினது வாக்குகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்ததாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார். அடுத்த வாரத்திற்குள் கட்சி சார்பில் களமிறங்கவுள்ள வேட்பாளரைப் பெயரிடும் நோக்கில் தீர்மானங்கள் எட்டப்படவுள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் இதன்போது கூறியுள்ளார்.