தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டி; இந்தியா வெற்றி

தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி

by Staff Writer 19-09-2019 | 8:17 AM
Colombo (News 1st) தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் இந்தியா 7 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது. சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்துள்ள வீரராக இந்திய அணித்தலைவர் விராட் ​கோஹ்லி பதிவாகியுள்ளார். மொஹாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா சார்பாக அணித்தலைவர் குயின்டன் டி கொக் 52 ஓட்டங்களையும் டெம்பா பௌமா 49 ஓட்டங்களையும் பெற்றனர். தென்னாபிரிக்கா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களைப் பெற்றது. வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் 40 ஓட்டங்களை பெற்றார். அணித்தலைவர் விராட் கோஹ்லி இறுதிவரை களத்தில் நின்று 3 சிக்ஸர்கள் 4 பவுன்டரிகளுடன் 72 ஓட்டங்களை விளாசினார். இந்தியா 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதன்போது விராட் ​கோஹ்லி சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் அதிகூடிய ஓட்டங்களை குவித்த வீரராக பதிவானதுடன், அவர் 2441 ஓட்டங்களை குவித்துள்ளார். ரோஹித் சர்மாவின் சாதனையை இதன்போது விராட் கோஹ்லி முறியடித்தார். 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் 1 - 0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.