மேலதிகக் கொடுப்பனவுகள்  இடைநிறுத்தம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவிருந்த மேலதிகக் கொடுப்பனவு ஜனாதிபதியால் இடைநிறுத்தம்

by Staff Writer 18-09-2019 | 8:39 PM
Colombo (News 1st) சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அடிப்படையாகக் கொண்டு பணிப்பகிஷ்கரிப்புகளும் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்படும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவிருந்த இரண்டு இலட்சம் ரூபா மேலதிகக் கொடுப்பனவை ஜனாதிபதி இடைநிறுத்தியுள்ளார். குருநாகலில் 1492 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். இதேவேளை, இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றிருந்த ஜனாதிபதி, தேர்தல் அண்மித்துள்ள நிலையில், அதிகளவிலானோருக்கு அரச நியமனங்கள் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார். இந்நிலையில், அரசியல் பழிவாங்கலுக்குள்ளாகிய சிலருக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக ஜனாதிபதியின் எதிர்ப்பின் மத்தியில் அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டுள்ளது. சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைக் கோரி பல்வேறு தரப்பினர் வீதியில் இறங்கி நாட்டின் செயற்பாடுகளைக் குழப்பும் நிலையில், பிரதமர் உள்ளிட்ட குழுவினர் தமது இலாபத்திற்காக மக்களின் நிதியை வேண்டுமென்றே செலவிட்டு, தமக்குத் தேவையானவர்களுக்கு நியமனம் மற்றும் சலுகைகளை வழங்கி வருகின்றனர். 21 மில்லியன் பேரை அசௌகரியத்திற்குள்ளாக்கி தலைமைத்துவத்தின் இயலாமையை அல்லவா இவ்வாறு சுட்டிக்காட்டுகின்றனர்? அரசியல் அழுத்தங்களின்றி 30 ஆயிரம் ஊழியர்கள் வரை சேவையாற்றும் தனியார் நிறுவனங்கள் எவ்வித ஊழியர் நெருக்கடிகளுமின்றி நாட்டின் வருமானத்தை ஈட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றன. அவ்வாறான தலைமைத்துவத்தை வழங்க இயலுமையற்ற நபர்கள், அதனை முன்னெடுக்கக்கூடிய ஒருவருக்கு இடமளித்து ஒதுங்க வேண்டுமல்லவா?

ஏனைய செய்திகள்