பாகிஸ்தானின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய தீர்மானம்

பாகிஸ்தானின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய ICC தீர்மானம்

by Staff Writer 18-09-2019 | 1:17 PM
Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஆராய்வதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது. இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்காக பாகிஸ்தான் செயற்படுத்தியுள்ள பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை முழுமையாக ஆராயவுள்ளதாக சர்வதேச தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தப் பரிசோதனைக்கு பின்னர் கிரிக்கெட் தொடருக்கான அதிகாரிகள் பெயரிடப்படவுள்ளனர். பாகிஸ்தான் மற்றும் ஸிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின்போதும் சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிகாரிகளைப் பெயரிடவில்லை. இதன் காரணமாக குறித்த இரு அணிகளுக்கு தமது கிரிக்கெட் தொடருக்கான அதிகாரிகளை பெயரிடவேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறான பின்புலத்தில் பாதுகாப்புக் காரணங்களை முன்னிலைப்படுத்தி இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிறுவனங்களும் அதிகாரிகளைப் பெயரிடவேண்டிய நிலை ஏற்படும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் 3 சர்வதேச ஒருநாள் மற்றும் 3 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் மோதவுள்ளன. இந்த இரு தொடர்களும் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகி அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளன.