நாமல் ராஜபக்ஸவின் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட சுப்பிரமணியன் சுவாமி

by Staff Writer 18-09-2019 | 9:32 PM
Colombo (News 1st) பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று (17) இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் திருமண வரவேற்பு நிகழ்வில் அவர் கலந்துகொண்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமி இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். இது தொடர்பிலான நிழற்படங்களையும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் சுப்பிரமணியன் சுவாமி அமர்ந்துள்ள நிழற்படமும் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இதேவேளை, இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களையும் உள்ளடக்கி இந்து தன்னார்வ அமைப்பொன்றின் 17 கிளைகள் இயங்குவதாகவும் இது தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் சுப்ரமணியன் சுவாமி தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் புதல்வியும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடந்தவாரம் இலங்கைக்கு வருகை தந்து பலாலி விமான நிலையம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியிருந்தார். இந்த சந்திப்பு இடம்பெற்று ஓரிரு நாட்களில் சுப்ரமணியன் சுவாமி இலங்கைக்கான ஒரு நாள் விஜயமொன்றை நேற்று மேற்கொண்டிருந்தார். நாட்டில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான ஒரு பரபரப்பான சூழல் உருவாகியுள்ள நிலையில், பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இந்திய அரசியல் பிரபலங்கள் செயற்படுகின்றார்களா என்ற கேள்வியும் எழுகின்றது.