ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு இடைநிறுத்தம்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு விசாரணை தற்காலிகமாக இடைநிறுத்தம்

by Staff Writer 18-09-2019 | 6:02 PM
Colombo (News 1st) முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள 5 வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதை தற்காலிகமாக இடைநிறுத்தி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேல் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள சீராய்வு மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே, மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சீராய்வு மனுவை விசாரணைக்கு உட்படுத்தி இறுதி தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இந்த தடை உத்தரவு அமுலில் இருக்கும். 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான 5 வருட காலப்பகுதியில், சதொச ஊழியர்கள் 153 பேரை அவர்களது உத்தியோகப்பூர்வ பணியில் இருந்து நீக்கி, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, அரசுக்கு 4 கோடிக்கும்  அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் 5 வழக்குகள் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.