கிங்ஸ்பரி ஹோட்டல் தாக்குதல்தாரியின் உடற்பாகங்களை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு

by Staff Writer 18-09-2019 | 3:54 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய மொஹம்மட் அசாம் மொஹம்மட் முபாரக்கின் உடற்பாகங்களை பொறுப்பேற்க தற்கொலை குண்டுதாரியின் உறவினர்கள் மறுத்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இதற்கிணங்க, குறித்த உடற்பாகங்களை திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரிக்கு கோட்டை பிரதம நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார். குறித்த உடற்பாகங்களை பொரளை பொதுமயானத்தில் புதைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோட்டை நீதவான், திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை புதைக்கும் நடவடிக்கை தொடர்பான அறிக்கையொன்றை மன்றில் சமர்ப்பிக்குமாறு பொரளை பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.