விரிவான கூட்டமைப்பின் ஊடாகவே ஐ.தே.க போட்டியிடும்: அகில விராஜ் காரியவசம்

by Staff Writer 17-09-2019 | 8:55 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சி விரிவான கூட்டமைப்பின் ஊடாகவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எனவும், அந்த கூட்டமைப்பை உருவாக்குவதற்கான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலுக்காக தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் கூட்டமைப்பில் இணையவுள்ள கட்சிகளுக்குள்ளும் நெருக்கடியொன்று ஏற்பட்டுள்ளதாக காண்பிப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரே முன்நிறுத்தப்படுவார் எனவும் கட்சியின் ஊடாக தகுதியான வேட்பாளரை தெரிவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜனநாயகம் மற்றும் பாரம்பரியங்களை பாதுகாத்து, கட்சியின் யாப்பிற்கு அமைய வேட்பாளரை தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.