களனி, களு, கிங் கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு

களனி, களு, கிங் கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு

by Staff Writer 17-09-2019 | 6:55 AM
Colombo (News 1st) நிலவும் அதிக மழையுடனான வானிலையால் களனி, களு மற்றும் கிங் கங்கைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிக மழை தொடரும் பட்சத்தில் நீர்மட்டம் மேலும் உயர்வடைவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் மாலா அலவதுவல தெரிவித்துள்ளார். தொடரும் மழையுடனான வானிலையால் இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள பகுதிகளில் வாழ்வோரை, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் ஆய்வாளர் கலாநிதி வசந்த சேனாதீர குறிப்பிட்டுள்ளார். மேலும், தென், தென் மேல் மற்றும் தென் கிழக்கு கடற்பிராந்தியங்களில் நிலவும் அதிக மழை மற்றும் காற்றுடனான வானிலை எதிர்வரும் தினங்களுக்கு நீடிக்கும் என கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடா கடற்பிராந்தியங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், அதிக கவனம் செலுத்த வேண்டும் என கடற்றொழில் திணைக்களத்தின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் பத்மபிரிய திசேரா தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்றும் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.