எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை இரத்து செய்யக் கோரி மனு தாக்கல்

by Staff Writer 17-09-2019 | 5:04 PM
Colombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மூவரால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு வேட்பு மனுவின் பிரகாரம் தேர்தலை நடத்த வேண்டாம் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை நடத்தி உடனடியாக பிரதிநிதிகளை தெரிவு செய்யுமாறு கடந்த 30 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தால் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கமையவே ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், ஆணைக்குழுவைக் கூட்டாது எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான திகதியை அறிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரால் கடந்த 2 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி சட்டத்திற்கு முரணானது என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரால் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமைய தேர்தலை நடத்துவது சட்டவிரோதமானது எனவும், இதனூடாக தமது அடிப்படை உரிமை மீறப்படுவதாகவும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். அதற்கமைய, எதிர்வரும் 11 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள தேர்தலை இரத்து செய்து உத்தரவிடுமாறு கோரி அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.