தாமரைக் கோபுரம் திறந்து வைப்பு 

by Staff Writer 16-09-2019 | 5:35 PM
Colombo (News 1st) கொழும்பு மாநகரையே பார்க்கக்கூடிய தெற்காசியாவிலேயே மிக உயரமான தாமரைக் கோபுரம் இன்று (16) மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பிற்பகல் 5 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உலகின் உயரமான கோபுரங்களின் வரிசையில் இது 19ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ​ 356.3 மீற்றர் உயரம் கொண்ட தாமரைக் கோபுரத்தின் நிர்மாணப் பணிகளுக்காக 104.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது. இதில் 67 மில்லியன் டொலர் சீன வங்கியொன்றிடமிருந்து பெறப்பட்டுள்ளதுடன், எஞ்சிய தொகை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் செலவிடப்பட்டுள்ளது. சுழலும் வர்த்தக நிலையங்கள், வர்த்தகக் கட்டடத் தொகுதி, கலை நிகழ்வுகளுக்கு பயன்படுத்தக்கூடிய விசேட அரங்குகள் ஆகியவற்றை தாமரைக் கோபுரம் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தக் கோபுரத்திற்குள் 6 அதிசொகுசு அறைகள் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும். தாமரை மலரின் இதழ் போன்ற பகுதியில் 8 மாடிகள் அமைந்துள்ளதுடன், அதில் 6 மற்றும் ஏழாம் மாடிகள் வானொலி மற்றும் தொலைக்காட்சி டிஜிட்டல் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, நாட்டின் தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிகள் தமது ஔி/ஒலிபரப்பை மேல் மாகாணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தாமரைக் கோபுரத்திற்கு மேலிருந்து கொழும்பு மாநகரின் அழகை ரசிக்கும் அரிய வாய்ப்பு இன்று முதல் உங்களுக்கும் கிட்டியுள்ளது.