நீதிமன்றை நாடவுள்ளதாக S.B. திசாநாயக்க தெரிவிப்பு

கட்சி உறுப்புரிமை நீக்கம்; நீதிமன்றை நாடும் S.B. திசாநாயக்க

by Staff Writer 15-09-2019 | 7:29 AM
Colombo (News 1st) கட்சி உறுப்பிரிமையிலிருந்து நீக்கியமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் S.B. திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவிளலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தங்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கான இயலுமை, கட்சியின் பொதுச் செயலாளருக்கு இல்லை என S.B. திசாநாயக்க கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மத்திய செயற்குழுவைக் கூட்டி, விரிவாக கலந்துரையாடி ஏகமனதாக தீர்மானம் எடுக்காது செயலாளர் என்ற வகையில் இவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்வது சட்டத்திற்கு புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியிலிருந்து விலகுவது தொடர்பில் தயாசிறி ஜயசேகரவால் கேட்கப்பட்ட வினாவிற்கு, முன்னணி சட்டத்தரணிகளூடாக பதில் வழங்கியுள்ளதாகவும் S.B. திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தநிலையில், கட்சியின் அங்கத்துவத்தை இரத்து செய்தமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவித்த S.B. திசாநாயக்க, இதனூடாக ஏற்படக்கூடிய அனைத்து சவால்களையும் எதிர்நோக்க தயார் எனவும் கூறியுள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் ஐவரை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர நேற்று அறிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெற்றுள்ள டிலான் பெரேரா, S.B. திசாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவளிக்கும் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோரையே கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்கும் விஜித் விஜயமுனி சொய்சா மற்றும் எச்.எம். பௌசி ஆகியோரின் அங்கத்துவத்தை இரத்து செய்ய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கியமைக்கான கடிதம், பாராளுமன்ற உறுப்பினர்களிக்கு அடுத்தவாரம் அனுப்பிவைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.