பொருட்கள் விற்பனை முறைகேடு தொடர்பில் விசாரணை

விமான நிலையத்தில் வரியுடன் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கியமை தொடர்பில் விசாரணை

by Staff Writer 13-09-2019 | 3:42 PM
Colombo (News 1st) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரியுடன் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கான அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த நான்கு வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் , மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கிழக்கு மாகாண சபையின் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அசங்க ரன்லவினால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. சில வர்த்தக நிலையங்களுக்கு முறையற்ற வகையில் அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக பொய்யான வருமான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அசங்க ரன்ல குற்றஞ்சாட்டியுள்ளார். குற்றச்சாட்டு தொடர்பிலான சாட்சியங்களை பெற்றுக்கொள்ள எதிர்வரும் 17 ஆம் திகதி ஆணைக்குழுவிற்கு வருகை தருமாறு கிழக்கு மாகாண சபையின் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அசங்க ரன்லவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையே, சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவரையும் அழைக்க தீர்மானித்துள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.