பாராளுமன்ற உறுப்பினராக மனோஜ் சிறிசேன நியமனம்

மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கான பதவி வெற்றிடத்திற்கு மனோஜ் சிறிசேன நியமனம்

by Staff Writer 13-09-2019 | 3:23 PM
Colombo (News 1st) சந்திரசிறி கஜதீர காலமானதால் ஏற்பட்ட, மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கான பதவி வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அதிவிசேட வர்த்தமானியை வௌியிட்டுள்ளது. அதற்கமைய, நேற்று (12) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, சாந்த பண்டார இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு மீண்டும் அவரை நியமிக்க பரிந்துரைத்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். எதிர்வரும் நாட்களில் சாந்த பண்டாரவின் நியமனத்திற்கான வர்த்தமானி வௌியிடப்படும் எனவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.