அடுத்த வாரம் மீண்டும் கலந்துரையாடல்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் பிரச்சினை: அடுத்த வாரம் மீண்டும் கலந்துரையாடல்

by Staff Writer 13-09-2019 | 3:53 PM
Colombo (News 1st) பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பிலான மற்றுமொரு கலந்துரையாடல் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுடன் நேற்று (12) இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் M.M.B.K.மாயாதுன்னே தெரிவித்தார். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான விரிவுரைகளும் இடம்பெறவில்லை என பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்கள் தெரிவித்துள்ளனர். அரச சேவையாளர்களுக்கான சம்பள உயர்வைப் போன்று, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு மேற்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நான்காவது நாளாகவும் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமக்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் வரையில் பகிஷ்கரிப்பு தொடருமென பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் ஒன்றிணைந்த சங்கத்தின் தலைவர் தம்மிக S. பிரியந்த தெரிவித்தார்.