பேனர் சரிந்து வீழ்ந்து விபத்து: இளம்பெண் பலி

சென்னையில் பேனர் சரிந்து வீழ்ந்து விபத்து: இளம்பெண் பலி

by Bella Dalima 13-09-2019 | 5:02 PM
Colombo (News 1st) சென்னையில் அ.தி.மு.க-வினர் வைத்த பேனர் வீழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் 23 வயது இளம்பெண் பலியானார். பேனர் வைப்பதற்கு சென்னை மாநகராட்சி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சென்னை குரோம்பேட்டை - பவானி நகர் பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சுற்றுச்சாலையில் தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளார். பள்ளிக்கரணையின் முன்னாள் நகர மன்ற உறுப்பினரான சி.ஜெயகோபால் என்பவரின் மகனின் திருமண வரவேற்பு நிகழ்விற்காக சாலையெங்கும் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது சரிந்து வீழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது. பேனர் வீழ்ந்ததில் நிலை தடுமாறி கீழே வீழ்ந்த சுபஸ்ரீயின் வாகனத்தின் மீது தண்ணீர் ஏற்றிச்சென்ற லொறி மோதியுள்ளது. சுபஸ்ரீ லொறியின் சக்கரத்திற்குள் சிக்கி படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கனடா செல்வதற்காக விண்ணப்பித்திருந்த சுபஸ்ரீ, அதற்கான நேர்காணலை முடித்துவிட்டு வரும்போது இந்த விபத்துஇடம்பெற்றுள்ளது. உயிரிழந்த சுபஸ்ரீ அவரது பெற்றோருக்கு ஒரே மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.