ஷவேந்திர சில்வா நியமனம்: UNHRC இல் அவதானம்

ஷவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து UNHRC இல் அவதானம்

by Staff Writer 12-09-2019 | 7:45 AM
Colombo (News 1st) இலங்கையின் இராணுவத் தளபதியாக லெவ்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த நியமனம் இலங்கையின் உள்ளக விவகாரம் என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி A.L.A அஸீஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத் தொடர் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகின்றது. நேற்றைய அமர்வின்போது ஷவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கான பிரித்தானிய பிரதிநிதி ரீட்டா ஃப்ரென்ஞ் வலியுறுத்தியுள்ளார். ஆணையாளரே, இலங்கையின் இராணுவத் தளபதியாக ஜெனரல் சில்வா நியமிக்கப்பட்டதை அடுத்து இலங்கையின் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் எமது கவனமும் திரும்பியுள்ளது. இலங்கையின் எதிர்கால மனித உரிமை செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தாம் நம்புவதாக, ரீட்டா ஃப்ரென்ஞ் தெரிவித்திருந்தார். இதேவேளை, ஒருசில நாடுகளின் குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இத்தகைய கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றமை தொடர்பில் இலங்கை அதிருப்தி வெளியிட்டுள்ளது.