கல்வி சாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

by Staff Writer 12-09-2019 | 8:34 PM
Colombo (News 1st) சில கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று மூன்றாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அரச ஊழியர்களின் சம்பள உயர்விற்கு ஏற்ப பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாமையினால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் இவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட போதிலும், அதற்கு சிறந்த தீர்வு கிடைக்கவில்லை. பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று முற்பகல் பேராதனை பல்கலைக்கழகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கமும் இந்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதேவேளை பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியம் உள்ளிட்ட கல்வி சாரா ஊழியர்கள் சங்கம் கொழும்பில் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையென இதன்போது அவர்கள் தெரிவித்தனர். இதேவேளை ஆசிரியர், அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிபர் மற்றும் ஆசிரியர் சங்க ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.