200 இற்கும் அதிக வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

அதிக விலைக்கு கோதுமை விற்பனை; வர்த்தகர்கள் மீது வழக்கு

by Staff Writer 12-09-2019 | 8:24 AM
Colombo (News 1st) கோதுமை மாவை அதிக விலைக்கு விற்பனை செய்த 200 இற்கும் அதிக வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த 5 நாட்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் பிரியந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார். இதனிடையே, அதிகரிக்கப்பட்ட கோதுமை மாவின் விலையை குறைத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பழைய விலையிலேயே கோதுமை மாவை விற்பனை செய்வதற்கு நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 6அம் திகதி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 5 ரூபா 50 சதத்தினால் கோதுமை மா நிறுவனங்கள் அதிகரித்தன. கோதுமை மாவின் விலையை அதிகரித்தமை தொடர்பிலான விடயங்களை முன்வைப்பதற்காக, வாழ்க்கை செலவுக் குழுவுக்கு கோதுமை மா நிறுவனங்கள் நேற்று முன்தினம் அழைக்கப்பட்டிருந்தன. இதன்போது பழைய விலையில் கோதுமை மாவை விற்பனை செய்வதற்கு நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்ததாக வாழ்க்கை செலவுக் குழு குறிப்பிடுகின்றது. இந்த இணக்கப்பாடு தொடர்பில் சிங்கப்பூரிலுள்ள தங்களின் தலைமை அலுவலகத்திற்கு அறிவித்ததன் பின்னர், அதனை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக கோதுமை மா நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கோதுமை மாவின் விலை அதிகரித்தமை தொடர்பில் காரணங்களை முன்வைப்பதற்கு, 3 வார கால அவகாசம் அமைச்சர் பி. ஹரிசனால் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.