புதிய சட்டங்களை துரிதமாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

by Bella Dalima 11-09-2019 | 9:27 PM
Colombo (News 1st) பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குத் தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளவும் புதிய சட்டங்களை துரிதமாக அமுல்படுத்தவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பிலான பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவின் மீளாய்வு கூட்டத்தில் இன்று முற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பது அல்லது பங்கேற்காதிருப்பது தொடர்பில் தமது அபிப்பிராயத்திற்கு அமைய தீர்மானிக்க முடியும் என சட்ட மா அதிபர் அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். எனினும், தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையிலும் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.