பால்மா விலைச்சூத்திரத்திற்கு அனுமதி

பால்மா விலைச்சூத்திரத்திற்கு வாழ்க்கைச் செலவுக்குழு அனுமதி

by Staff Writer 11-09-2019 | 1:37 PM
Colombo (News 1st) பால்மாவிற்காகத் தயாரிக்கப்பட்ட விலைச் சூத்திரத்திற்கு வாழ்க்கைச் செலவுக் குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, புதிய விலைச் சூத்திரத்திற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக அதனை அமைச்சரவைக்கு அனுப்பவுள்ளதாக வாழ்க்கைச் செலவுக் குழுவின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். விலைச் சூத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்ததன் பின்னர், பால்மா விலையைத் திருத்துவது தொடர்பில் ஆராயப்படும் என அவர் கூறியுள்ளார். உலக சந்தையில் காணப்படும் விலையை கருத்திற்கொண்டு, விலைச் சூத்திரத்திற்கு அமைய உள்நாட்டுச் சந்தையில் பால்மாவிற்கான விலை நிர்ணயிக்கப்படும் என வாழ்க்கைச் செலவுக் குழு அறிவித்துள்ளது. இதேவேளை, பழைய விலையில் கோதுமை மா விற்பனை செய்வதற்கு நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் வாழ்க்கைச் செலவுக் குழு தெரிவித்துள்ளது. இந்த இணக்கப்பாடு தொடர்பில் சிங்கப்பூரிலுள்ள தங்களின் தலைமை அலுவலகத்திற்கு அறிவித்ததன் பின்னர், அதனை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக கோதுமை மா நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கடந்த 6ஆம் திகதி ஒரு கிலோகிராம் கோதுமை மாவை 5 ரூபாவால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.