ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாளை ஆஜராகமுடியாது - பிரதமர்

by Staff Writer 11-09-2019 | 1:27 PM
Colombo (News 1st) தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நாளையதினம் ஆஜராக முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க எழுத்துமூலமாக அறிவித்துள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மன்னார் மாவட்டத்தில் நாளைய தினம் இடம்பெறவுள்ள சில நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளமையால் ஆணைக்குழுவில் ஆஜராக முடியாது என பிரதமர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 16ஆம் திகதி காலை 9.30 மணிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பிரதமரை ஆஜராகுமாறு மீள அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சிக்கான கட்டடம் ஒன்றை இராஜகிரிய பகுதியில் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்டமை தொடர்பான சாட்சி விசாரணைக்காக பிரதமருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. இதேவேளை, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று சாட்சியம் வழங்கியிருந்தார். கல்வி அமைச்சின் விநியோகப் பிரிவு பணிப்பாளரான I.M.K.B. இலங்கசிங்க என்பவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று விசாரணைகள் தொடர்பில் சாட்சியமளிப்பதற்கே கல்வி அமைச்சர் இன்று ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். இந்த விடயம் தொடர்பில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் கல்வி அமைச்சர் சாட்சியம் வழங்கியுள்ளார்.

ஏனைய செய்திகள்