by Staff Writer 11-09-2019 | 6:15 AM
Colombo (News 1st) விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் விளையாட்டுத்துறை சட்டத்தில் 39/1 சரத்தின் பிரகாரம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு விசேட கட்டளையொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால, நிறைவேற்றுக் குழு உறுப்பினராக, சமீபத்திய முன்னாள் தலைவராக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினுள்ளே எந்தவொரு பதவியையும் வகிக்க முடியாதவாறு புதிய கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தலைவர் அவருக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்துதல் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தல் என்பன புதிய கட்டளையின் ஊடாக தடை செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் தலைவரான திலங்க சுமதிபாலவுக்கு எதிராக நடத்தப்படவுள்ள விசாரணை காரணமாக இந்தத் தற்காலிக தடை உத்தரவை விளையாட்டுத்துறை அமைச்சர் பிறப்பித்துள்ளார்.
பிலியந்தல விளையாட்டுக் கழகம் 2019 ஓகஸ்ட் 30 ஆம் திகதி முன்வைத்த எதிர்ப்புக்கு அமைவாக விசாரணை நடத்தப்படவுள்ளதுடன் அதற்காக மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரியாகவோ அல்லது முன்னாள் தலைவராகவோ திலங்க சுமதிபால செயற்பட முடியுமா என்பது தொடர்பில் விசாரணைக் குழு, விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அறிக்கையிடவுள்ளது.